செவ்வாய், 13 மார்ச், 2012


திருப்பூங்குடி ஆறுமுகம்

திருப்பூங்குடி ஆறுமுகம் இலங்கையில் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் தனது கதாப்பிரசங்கங்களினாலும், வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளாலும் பெயர் பெற்றவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மற்றும் இலங்கை ரூபவாகினித் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தமிழ் மற்றும் சைவப்பணியாற்றியவர்.
புங்குடுதீவில் கிழக்கூர் பகுதியில் பெரும் வணிகர் கந்தப்பு, அன்னப்பிள்ளை ஆகியோருக்கு மூத்த புத்திரனாகத் தோன்றியவர் திருப்பூங்குடி ஆறுமுகம் எனப் பின்பு பெயர் விளங்கிய கந்தப்பு ஆறுமுகம். தனது ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்த இவர், தனது அயராத உழைப்பினாலும், மனம் தளராத உறுதியினாலும், கல்வியில் உயர்ந்து, பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரில் பயின்று, ஆசிரியராகப் பரிணமித்தார். கொழும்பு நுண்கலைக் கல்லூரியில் சித்திரக்கலையினையும், கட்டிடக்கலையினையும் கற்றுத்தேர்ந்தார். இவர் கொழும்பு விவாகானந்தாக் கல்லூரியில் ஆசிரியராகவும், யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரியில் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார்.
தன் சிறுவயதிலேயே நாடக்கலையில் பெரும் நாட்டம் கொண்டவராக இருந்தார். தன் தாய்மாமனாராகிய பொன்னம்பலம் அவர்களின் வழிகாட்டலில் பல நாடகங்களில் நடித்தார். இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும், இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, எனத் தூரதேசங்களிலும் தனது கதாப்பிரசங்கங்களினாலும், வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளாலும் பெயர் பெற்றவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மற்றும் இலங்கை ரூபவாகினித் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தமிழ் மற்றும் சைவப்பணியாற்றியவர்.
வில்லுப்பாட்டு என்னும் கிராமியக் கலைவடிவத்தை முதல்முதல் ஈழப்பெருமண்ணில் புதுமெருகோடு அரங்கேற்றி விரிவுபடுத்தியர் “திருப்பூங்குடி” என்று தன் தாயூரின் பெயரால் பெருமையுடன் அழைக்கப்படும் திருப்பூங்குடி ஆறுமுகம். இன்று வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளில் பிரபலமாக பிரகாசித்துகொண்டிருக்கும் சின்னமணி, நாச்சிமார் கோவிலடி இராஜன், போன்றவர்கள் திருப்பூங்குடி அவர்களிடம் வில்லிசை பயின்றவர்கள்.
இன்னிசை வேந்தர் பொன். சுந்தரலிங்கம், பொன் சுபாஸ் சந்திரன் ஆகியோர் திருபூங்குடி அவர்களின் மைத்துனர்கள் ஆவர்.
திருப்பூங்குடி அவர்களின் சைவத்தமிழ் பணியைப் பாராட்டி சுத்தானந்தபாரதி அவர்கள் “அன்புக்கடல்” என்ற போற்றிப் புகழ்ந்துள்ளார். தமிழிசைமாமணி சீர்காழி கோவிந்தராஜன் அவர்களும் இவருக்கு “வில்லிசைமழை” எனப் பட்டமளித்துக் கெளரவமளித்துள்ளார்.

திங்கள், 12 மார்ச், 2012

அன்புக்கடல் வில்லிசைமழை திருப்பூங்குடி வி. வி. கே. ஆறுமுகம்

“Aeschylus and Plato are remembered today long after the triumphs of Imperial Athens are gone. Dante outlived the ambitions of thirteenth century Florence. Goethe stands serenely above the politics of Germany, and I am certain that after the dust of centuries has passed over cities, we too will be remembered not for victories or defeats in battle or in politics, but for our contribution to the human spirit.”
- President John F. Kennedy - 


தீதகன்று உலகமுய்ய திருவதாரம் செய்தார் சுந்தரர். வேதநெறி தழைத்தோங்க, மிகுசைவத்துறை விளங்க பூதபரப்பரை பொலிய புனிதவாய் மலர்ந்தழுதது ஞானசம்பந்தக் குழந்தை.
“அருவமும் உருவமாகி, அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பு அதுவோர் மேனியாகிக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒரு திருமுருகன் ஆங்கே உதித்தனன் உலகம் உய்ய.”
உலகம் உய்யவென ஆண்டவன் தோன்றினான். அவன் அருளாளர்களையும் அனுப்பிவைத்தான். எல்லோரும் எல்லாத் திறமைகளோடும் பிறப்பதில்லை. அப்படித் திறமைகளோடு பிறந்தவர்களிலும் ஒருசிலரேதான் அந்தத் திறமைகளை வளர்த்துக் கொண்டு அத்திறமையின் வளத்தை மற்றவர்களுக்கும் வாரித் தந்திருகிறார்கள். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று அள்ளித்தந்த பள்ளிக்கூடங்கள் அவர்கள். அவர்களைத் தான் உண்மைக் கலைஞர்களென உலகம் போற்றுகிறது, கொண்டாடுகிறது.

பொன்னளந்து குவிக்கும் புதுமைப் பெரும் பூங்குடியில் மண்ணழைந்து விளையாடிய குழந்தை, பரதத்தின் தென்னகமாம் ஈழத்தில் தன் தேன் குரலால், வான்புகழும் தமிழையும், சைவத்தையும் போற்றி வளர்த்த வரலாறு. இந்த வரலாறு காலக்கணக்கனின் கடிய நடைகளுக்குள்ளே காணாமல் போய் விடாமல், நம்மவர் உள்ளத்துள் என்றென்றும் வாழ வேண்டி பேசுவதும் எழுதுவதும் நம் வரலாற்றுக்கடன்.

புங்குடுதீவில் கிழக்கூர் பகுதியில் பெரும் வர்த்தகர் கந்தப்பு அவர்களுக்கும், அவர்களின் அன்பு மனையாள் அன்னப்பிள்ளை அவர்களுக்கும் மூத்தபுத்திரனாகத் தோன்றியவர்தான் திருப்பூங்குடி ஆறுமுகம் எனப் பின்பு பெயர் விளங்கிய கந்தப்பு ஆறுமுகம் அவர்கள். தனது ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்த இவர், தனது அயராத உழைப்பினாலும், மனம் தளராத உறுதியினாலும், கல்வியில் உயர்த்து, பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரில் பயின்று, ஆர்வமும், அர்ப்பணிப்புப் பண்பும் வாய்ந்த ஆசிரியராகப் பரிணமித்தார். கொழும்பு நுண்கலைக் கல்லூரியில் சித்திரக்கலையினையும், கட்டிடக்கலையினையும் கற்றுத்தேர்ந்தார். இவர் கொழும்பு விவாகானந்தாக் கல்லூரியில் ஆசிரியராகவும், யாழ். வைத்தீஸ்வராக் கல்லூரியில் தலைமை ஆசிரியராகவும் கல்வித்துறையில் ஆற்றியபணி போற்றுதலுக்குரியது.
“இன் நறுங்கனிச் சோலைகள் செய்தல்இனிய நீர்த்தண்சுனைகள் இயற்றல்அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாறாயிரம் நாட்டல்பின்னருள்ள தருமங்கள் யாவும்பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல் அன்ன யாவினும் புண்ணியங் கோடி ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்” என்றானே அந்த முண்டாசுக்கவிஞன் பாரதியாரின் கூற்றினிற்கேற்ப கல்விப் பணியாற்றியவர்.
பாவேந்தன் பாரதிதானின் பாட்டுரைக்குமே “இன்பத் தமிழ்க்கல்வி யாவரும் கற்றவர்
என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால்
துன்பங்கள் நீங்கும், சுகம்வரும், நெஞ்சினில்
தூய்மை யுண்டாகிடும், வீரம் வரும்”. தான்பெற்ற தமிழின்பத்தையும், சைவானுபவமாம் இறையின்பத்தையும், ஒன்றுகலந்து மாணவச்செல்வங்களுக்கு ஊட்டியவர். இவரிடன் கல்விகற்ற பலர் இன்று நல்லனிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

இவரின் பேச்சாற்றலும், இசைத்திறனும் இவரின் காலம் நன்கறியும். தன் சிறுவயதிலேயே நாடக்கலையில் பெரும் நாட்டம் கொண்டவராக இருந்தார். தன் தாய்மாமனாராகிய மதிப்புக்குரிய பொன்னம்பலம் அவர்களின் வழிகாட்டலில் பல நாடகங்களில் நடித்தார். இவற்றில் “அரிச்சந்திரன்”என்ற நாடகம் குறிப்பிடத்தக்கது. பாட்டுத்திறத்தாலே இந்த வையத்தினைப் பாலித்திட வேண்டும்” என்ற பாரதியின் எண்ணத்திற்கு பாரதியைப் போல செயல்வடிவம் கொடுத்தவர்களுள் திருப்பூங்குடி ஆறுமுகம் அவர்களும் ஒருவர். இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும், இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, எனத் தூரதேசங்களிலும் ஆண்டுகள் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் தனது கதாப்பிரசங்கங்களினாலும், வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளாலும் பெயர் பெற்றவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மற்றும் இலங்கை ரூபவாகினித் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தமிழ் மற்றும் சைவப்பணியாற்றியவர்.

வில்லுப்பாட்டு என்னும் கிராமியக் கலைவடிவத்தை முதல்முதல் ஈழப்பெருமண்ணில் புதுமெருகோடு அரங்கேற்றி விரிவுபடுத்தியர் “திருப்பூங்குடி” என்று தன் தாயூரின் பெயரால் பெருமையுடன் அழைக்கப்படும் திருப்பூங்குடி ஆறுமுகம் அவர்கள். இன்று வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளில் பிரபலமாக பிரகாசித்துகொண்டிருக்கும் சின்னமணி, நாச்சிமார் கோவிலடி இராஜன், போன்றவர்கள் திருப்பூங்குடி அவர்களிடம் வில்லிசை பயின்று, அவரின் பாதச்சுவடிகளில் பயணித்த பண்பாளர்கள்.

தமிழின்மேலும் தமிழர்தன்பாலும் இவருக்கிருந்த அளவு கடந்த அன்பு இவரை அரசியலில் ஈர்த்தது. தமிழ்த்தலைவர்களான தந்தை செல்வா, அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், கா.பொ. இரத்தினம் ஆகியோரோடு நெருங்கிப் பணியாற்றிய இவர் அதன் காரணமாக சிங்கள அரசின் மோசமான நெருக்கடிகளுக்குள்ளானார்.

கர்மவீரர் காமராஜ், அருள்வாருதி கிருபானந்தவாரியார், வாகீசகலாநிதி கி. வா. ஜெகனாதன், சிலம்புசெல்வர் ம. பொ. சிவஞானகிராமணியார், திருவாசகத்தேன் கிரிதாரி பிரசாத், போன்ற தலைவர்கள், அறிஞர்களோடு பெரிதும் பழகியவர்.

திருப்பூங்குடி அவர்களின் சமகாலத்து ஈழத்து அறிஞர்களான துர்க்காதுரந்தரி தங்கம்மா அப்பாக்குட்டி, அளவெட்டி வினாசித்தம்பி, போன்றவர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர். இன்னிசை வேந்தர் பொன். சுந்தரலிங்கம், பொன் சுபாஸ் சந்திரன் ஆகியோர் திருப்பூங்குடி அவர்களின் மைத்துனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பூங்குடி அவர்களின் சைவத்தமிழ் பணியைப் பாராட்டி சுத்தானந்தபாரதி அவர்கள் “அன்புக்கடல்” என்ற போற்றிப் புகழ்ந்துள்ளார். தமிழிசைமாமணி சீர்காழி கோவிந்தராஜன் அவர்களும் இவருக்கு “வில்லிசைமழை” எனப் பட்டமளித்துக் கெளரவமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அலைகடல் வற்றினும் திருப்பூங்குடியில் தோன்றிய இந்த அன்புப்பெருங்கடல் வற்றாத பெருங்கடல்.
http://ta.wikipedia.org/wiki/திருப்பூங்குடி_ஆறுமுகம் )